இந்தியா

இந்திய - சீன உறவை வலுப்படுத்தினால் புதிய வரலாறு படைக்கலாம்: மோடி

செய்திப்பிரிவு

இந்திய - சீன உறவை வலுப்படுத்தினால், புதிய வரலாறு படைக்க முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை சீனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, "வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகிய விஷயங்களில் இந்தியாவும் சீனாவும் இணைந்துள்ளன. இரு நாடுகளும் இணைந்து மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

இந்தியா - சீனாவுக்கு இடையேயான உறவு வெகுவாக வளர்ந்துள்ளது. இந்த உறவின் வளர்ச்சி மனித் தன்மையின் வரலாற்றை மாற்றி அமைக்கும். மேலும், இந்த கிரகத்தையே சிறப்பாக மாற்றி அமைக்கும்.

இந்தியாவும் சீனாவும் இணைந்து பல மைல்கல்களை ஒன்றாகக் கடக்கும் என்று நான் நம்புகிறேன். பல மைல்களை கடப்பதன் மூலம் இரு நாடுகள் மட்டுமின்றி ஆசியாவும் மொத்த மக்களினமும் வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்திற்கானப் பாதையை நோக்கி முன்னேறும்.

இந்தியா மற்றும் சீனாவின் பெரும் மக்கள் தொகையை குறித்துப் பேசும்போது, " இந்தியாவும் சீனாவும் பயன்பெற்றால் உலகின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் மக்கள் பயன் பெறுகின்றனர். அதே போல இந்திய - சீனாவின் உறவு வலுப்பட்டால் உலகின் 35 சதவீத மக்கள் நெருக்கமாகிறார்கள். இந்திய - சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்தால் உலக மக்கள் தொகையில் 35 சதவீத மக்கள் தொகையின் வாழ்வாதாரம் தரமான மாற்றத்தை அடையும்.

இருநாடுகளுக்கு இடையேயான உறவின் மூலம் புதிய வரலாற்றை உருவாக்கி மனித குலத்திற்கு சிறந்த வருங்காலத்தையும் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார் மோடி.

SCROLL FOR NEXT