மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது தனது மகனுக்கு காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கேட்டார் ராதாகிருஷ்ண பாட்டீல். ஆனால் அவர் கேட்ட அகமது நகர் மக்களவைத் தொகுதியை, காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டது. இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது ராதாகிருஷ்ண பாட்டீல் அதிருப்தியில் இருந்தார். இதைத் தொடர்ந்து பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இதனிடையே காங்கிரஸ் மீது அதிருப்தியடைந்த ராதாகிருஷ்ண பாட்டீலின் மகன், சுஜாய் பாட்டீல் பாஜகவில் இணைந்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த ராதாகிருஷ்ண பாட்டீல் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். அவர் விரைவில் தனது ஆதரவாளர்கள், சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.