இந்தியா

தீவிரமடையும் அரசு மருத்துவர்கள் போராட்டம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்து டெல்லி மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

கொல்கத்தாவில் உள்ள மருத்தவகல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி மருத்தவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மட்டுமின்றி பல நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மேற்குவங்க அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை இன்று சந்தித்தனர். அப்போது மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் சமூக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேற்குவங்க மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT