உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராக நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் அளித்துள்ள புகார் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனம் தொடர்ந்துள்ள இந்த வழக்கு வரும் 29-ம் தேதி அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் மூத்த நீதிபதி என்.வி.ரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றனர்.
நீதிபதி ரமணா விலகல்
இந்நிலையில் புகார் அளித்த முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள நீதிபதி என்.வி.ரமணா, தலைமை நீதிபதிக்கு நெருங்கிய நண்பர் என்பதால், அவர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்து விசாரணைக் குழு தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதினார். .
இதையடுத்து நீதிபதி என்.வி.ரமணா தாமாக முன்வந்து விசாரணைக் குழுவில் இருந்து விலக்கிக்கொண்டார். அதற்குப் பதிலாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புகார் அளித்த முன்னாள் பெண் ஊழியர் நேற்று நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் விசாரணைக் குழு முன் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் ஊழலுக்கு எதிரான இந்தியக் கவுன்சில் எனும் அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் , தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு தனது விசாரணையை முடிக்கும் வரை, விசாரணை தொடர்பான எந்த விஷயங்களையும், தகவல்களையும் ஊடகங்கள் வெளியிடவும், நாளேடுகளில் செய்தியாகப் பிரசுரிக்கவும் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி குறித்த செய்திகளை வெளியிடுவது, இந்திய நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்துவிடும். பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடத் தடை விதிக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், டெல்லி அரசு, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, டெல்லி போலீஸ் ஆணையர், வாட்ஸ் அப், கூகுள், யூடியூப், லிங்க்ட்இன், ஸ்க்ரால் இணையதளம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 29-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.