உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது பிரியாணி வழங்கப்பட்டத்தில் சிக்கல் ஏற்பட்டு அது மோதலாக வெடித்ததை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காக்ரோலி காவல்நிலைய வட்ட அதிகாரி ராம் மோகன் சர்மா தெரிவித்ததாவது:
காங்கிரஸ் வேட்பாளர் நசிமுதீன் சித்திக்கை ஆதரித்து இங்கு பிரச்சாரம் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டம் ததேதா கிராமத்தில் உள்ள அப்பகுதி எம்எல்ஏ மவுலானா ஜமீல் வீட்டில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு அனைவருக்கும் உணவுவேளையின்போது பிரியாணி வழங்கப்பட்டது. இதில் யாருக்கு முதலில் வழங்குவது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் மோதலாக வெடித்தது. இக்கலவரத்தில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று வன்முறை கும்பலை கலைத்தனர். எம்எல்ஏ ஜமீல் மற்றும் மகன் நயீம் அகமது உள்ளிட்ட 34 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் தொண்டர்களுக்கு பிரியாணி வழங்குவதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. எனவே,
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் விதிமீறல் சட்டத்தின்கீழும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிராமத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ராம் மோகன் சர்மா தெரிவித்தார்.
கடந்த வாரம் பிஎஸ்பியைச் சேர்ந்த மவுலானா ஜமீல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அவர் 2012ல் மீராபூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும், ஏப்ரல் 11ம் தேதி மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் முசாபர்நகர் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.