இந்தியா

மோடியின் சாதி குறித்து எனக்கு தெரியாது, பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறேன்:  பிரியங்கா காந்தி பதிலடி

ஐஏஎன்எஸ்

பிரதமர் மோடியின் சாதி என்ன என்று எனக்கு தெரியாது, நானும், எதிர்க்கட்சியினரும் பிரச்சினைகளை மட்டுமே எழுப்பி பிரச்சாரம் செய்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, கன்னோஜ் நகரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது  பிரதமர் மோடி பேசுகையில், " பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி என்னுடைய சாதிச் சான்றிதழை பிரதி எடுத்து வழங்கி வருகிறார். நான் இந்த நேரத்தில் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் குஜராத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தவன்.

மாயாவதி என்னுடைய சாதி சான்றிதழை வெளியிடாத வரைக்கும்  நான் என்னுடைய சாதி குறித்து கவலைப்படவில்லை. இப்போது அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் கட்சியும் கூட என்னுடைய சாதியை பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இதுவரை சாதி அ ரசியல் செய்தது இல்லை. நான் அவர்களிடம் கேட்பதெல்லாம், தயவு செய்து என்னை சாதி அரசியலுக்கு இழுக்காதீர்கள் " என்று  பேசி இருந்தார்.

இந்நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, புசியாவே கிராமத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு பிரியங்கா காந்தி புறப்பட்டார். அப்போது அவரிடம் , மோடியின் சாதி குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரியங்கா காந்தி  பதில்அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

" எனக்கு இப்போதுவரைக்கும் மோடி என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பது தெரியாது. எதிர்க்கட்சியினரும், நானும் பிரச்சினைகளை எழுப்பித்தான் பிரச்சாரம் செய்து வருகிறோம். குறிப்பாக நாட்டில் வேலையின்மை, வளர்ச்சி, சுகாதாரச் சேவைகள், கல்வி, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் ஆகியவற்றைத்தான் பேசுகிறோம். சாதியை குறிப்பிட்டுப் பேசவில்லை.

இந்த தேர்தலில் பாஜக தேசியவாதத்தை ஆயுதமாக எடுத்துப் பேசி வருகிறது. தேசியவாதம் என்பது மக்களுக்கு சேவை செய்வது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து அதை தீர்ப்பதாகும்.

ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்துக் கேட்பதில்லை. அவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன இதற்குப் பெயர் தேசியவாதம் இல்லை.

அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி, இந்த தொகுதி மக்களுக்கு ஷூக்களை வழங்கி அவமானப்படுத்துகிறார். இதுதான் பாஜக தேர்தலில் போட்டியிடும் முறையா இது சரியான செயல் அல்ல.

தேர்தலில் போட்டி இப்படி இருக்கக் கூடாது. மக்களுடன் மக்களாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும், நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் என்ன செய்வோம் என்று கூறுவோம்.

 அமேதி மக்கள் சுயமரியாதை நிரம்பியவர்கள், அவர்கள் ஒருபோதும் யாரிடமும் யாசகம் கேட்கமாட்டார்கள். எனக்கு 12 வயதாக இருந்தபோதில் இருந்தே இங்கு வந்துகொண்டிருக்கிறேன். ஒருபோதும் மக்கள் யாரிடமும் எதுவும் கேட்டதில்லை

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT