ஆந்திர மாநிலத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் அண்மையில் புகார் அளித்தனர்.
அவர்கள் தங்கள் புகாரில், “மாநில புலனாய்வுத்துறை ஐஜி வெங்கடேஸ்வர ராவ், கடப்பா எஸ்.பி ராகுல் தேவ் ஷர்மா, ஸ்ரீகாகுளம் எஸ்.பி வெங்கடரத்தினம் ஆகிய மூவரும் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரின் தொலைபேசிகளை ஒட்டு கேட்கின்றனர். தேர்தல் முடியும் வரை இவர்கள் எந்தப் பதவியும் வகிக்க அனுமதிக்கக் கூடாது” என்று கோரியிருந்தனர்.
இந்தப் புகாரின் பேரில் மேற்கண்ட 3 அதிகாரிளும் மாநில காவல்துறை தலைமையகத்தில் ஆஜராக வேண்டும். தேர்தல் தொடர்பான எந்தவொரு பணியும் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். “21 வழக்குகள் நிலுவையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி கூறிய பொய் குற்றச்சாட்டை நம்பி, அரசி டம் எவ்வித விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு நேற்று வழக்குத் தொடர்ந்துள்ளது.