இந்தியா

பிஜு ஜனதா தள வேட்பாளர்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு

செய்திப்பிரிவு

கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களை பிஜு ஜனதா தளம் கைப்பற்றியது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 9, பாஜக 7, காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றன. தற்போது ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆளும் பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தப் பின்னணியில் முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று கேந்திரபாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளர்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இதேபோல மற்ற கட்சிகளும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைய பெண்களின் பங்களிப்பு அவசியம். மக்களவையில் 33 சதவீத எம்.பி.க்கள் பெண்களாக இருக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் சார்பில் 7 அல்லது 8 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து  பட்நாயக் எதுவும் கூறவில்லை. ஒடிசா சட்டப்பேரவையில் தற்போது 12 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

SCROLL FOR NEXT