அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் பொருட்டு இன்று உத்தரவு பிறப்பிக்க இருந்தநிலையில் அதனை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி விசாரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது.
ஆனால், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் சமூக மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதல்வர் கல்யாண் சிங் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக யு.யு. லலித் வாதாடியுள்ளார். அவர்தான் தற்போது 5 நீதிபதி கொண்ட அமர்வில் நீதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு. லலித் அறிவித்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த புதிய அமர்வு அயோத்தி வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் மத்தியஸ்ர்கள் மூலம் தீர்வு காண நீதிமன்றம் விரும்புவதாகவும் இதுதொடர்பான உத்தரவை மார்ச் 6-ம் தேதி பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் மனுதாரர்களில் ஒருதரப்பான இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சினைக்கு தீ்ர்வு காண எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாப்தே, முன்கூட்டியே இதுபோன்ற கருத்துக்களை ஏன் தெரிவிக்க வேண்டும், மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண வாய்ப்பு இருந்தால் அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என கூறினார்.
அப்போது உத்தர பிரதேச அரசின் தரப்பிலும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வ காணும் முடிவு இந்த வழக்குக்கு பொருத்தமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது. அதுபோலவே வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தம் என்பதால் இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் உதவியை நாட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து மத்தியஸ்தர்களை சம்பந்தப்பட்ட தரப்பினரே பரிந்துரை செய்யலாம் என கூறிய நீதிபதிகள், இதற்கான உத்தரவு பிறப்பிப்பதை ஒத்தி வைத்தனர்.