இந்தியா

புல்வாமாவில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை: 4 வீரர்கள் வீரமரணம்

ஏஎன்ஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை பாதுகாப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில்  ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த துணைபுரிந்தவர்களாக இருக்கலாம் என  ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காஷ்மீர் மாநில போலீஸாரும், ராணுவத்தில் 55 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினரும் இணைந்து இன்று அதிகாலை பிங்லான் கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.

ராணுவத்தினர், போலீஸார் சுற்றிவளைத்தது அறிந்ததும், தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள், இதற்கு ராணுவத்தினரும் தக்கபதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 3 தீவிரவாதிகளை உயிருடன் பிடித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரு தரப்பும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால், மக்கள் யாரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT