நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டது, காங்கிரஸில் சிலர் என்னை அரசியல் ரீதியாக வளரவிடாமல் தடுக்கின்றனர் என கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வரா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
‘‘காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் தலித் தலைவர்களை வளர விடாமல் தடுக்க பார்க்கிறார்கள். மூன்று முறை எனக்கு முதல்வர் வாய்ப்பு வந்தபோதும், அந்த பதவியில் அமர எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதற்கு காரணம் நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் தான்.
நான் மட்டுமல்ல தலித் சமூகத்தைச் சேர்ந்த பசவலிங்கப்பா, மல்லிகார்ஜூன கார்கே போன்றவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே போன்ற தலித் தலைவர்களாலும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் தலித் சமூக தலைவர்களை வளரவிடாமல் தடுப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். நான் துணை முதல்வரானது கூட நீண்ட போராட்டுக்கு பிறகே. கடைசி நேரத்தில் அதற்கும் வாய்ப்பளிக்காமல் தடுக்க சிலர் திட்டமிட்டனர். அரசியல் ரீதியாக தலித் மக்களை அடக்க பார்க்கிறார்கள்’’ எனக் கூறினார்.