மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,வுக்கு லஞ்சம் வழங்குவதாக பேரம் பேசியதாக எழுந்த புகாரை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முன்னதாக இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமி அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.
ஆடியோ ஆதாரங்களை சபாநாயகர் ரமேஷ் குமார் முன்னிலையில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோருவேன் என்றார். மேலும், சபாநாயகர் மீது பூரண நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், குமாரசாமி குற்றச்சாட்டு பற்றி எடியூரப்பா மறுப்பு தெரிவித்து பேட்டியளித்தார்.
அவர் பேசும்போது, "நான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி குமாரசாமி வெளியிட்ட ஆடியோ போலியானது.
இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் குரலை வேண்டுமானாலும் இவ்வாறு ஜோடித்து ஆடியோவாக வெளியிட முடியும்.
நான் சபாநாயகருக்கு ரூ.50 கோடி வழங்கிய குற்றச்சாட்டை குமாரசாமி நிரூபித்துவிட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். இது 101% உறுதி.
குமாரசாமி ஒரு நல்ல நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். மக்களின் மதிப்பை காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு இழந்துவிட்டதால், பாஜக மீது பழியைப் போட பார்க்கிறார் குமாரசாமி.
சினிமா தயாரிப்பாளரான அவரிடம் இதுபோன்ற சித்தரிப்புக் கதைகள் நிறையவே இருக்கின்றன" என்றார்.