பிரதமர் மோடியின் பேட்டியில் ‘நான்’, ‘எனது’, ‘எங்கள்’ இவை மட்டும் தான் உள்ளன என காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.
புத்தாண்டு தினமான இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்ற நடவடிக்கை முடிந்த பிறகே அரசு தனது பணியை தொடங்க முடியும். அதன் பிறகே சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேசமயம் ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் வேண்டுமென்ற தலையிட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய காலத்தில் முடிய விடாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தாமதப்படுத்துகின்றனர்’’ எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் ‘‘பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஊடங்கள், பத்திரிக்கைகள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரது பேட்டி என்பது ‘நான்’, ‘எனது’, ‘எனக்கு’, ‘எனது செயல்பாடு’ இவை மட்டும் தான் உள்ளன. தன்னைச் சுற்றி மட்டுமே அவர் அரசியல் செய்கிறார்.
அவரது பேட்டியில் தான் என்கிற ஆணவத்தை மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார். நியாயமான கேள்விகளுக்கு, மக்கள் படும் அவதிகளுக்கு, பிரதமர் மோடியிடம் எந்த பதிலும் இல்லை’’ எனக் கூறினார்.