கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே கடலோரத் தீவு ஒன்றில் ஏற்பட்ட படகு விபத்தில் இன்று (புதன்கிழமை) 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த விபரம்:
கார்வார் கடற்பகுதியில் கூர்மகாடு தீவில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய படகில் சென்றவர்கள் தீவிலிருந்து திரும்பும்போது விபத்துக்குள்ளாகி அனைவரும் நீரில் மூழ்கினர். இச்சம்பவம் நேற்று முன்தினம் மதியம் 3.00 மணியளவில் நடந்துள்ளது.
கார்வாரிலிருந்து 3 கி.மீ.தொலைவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்க உடனடியாக இரண்டு கப்பற்படை படகுகள் வரவழைக்கப்பட்டன. 10 கடற்படைவீரர்கள் நீரில் மூழ்கி தேடத் தொடங்கினர். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒரு சிறிய ரக விமானமும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது. விபத்து நடந்த 24 மணிநேரத்துக்குள்ளாக கடற்படை வீரர்களும், கடலோர காவல்படையைச் சேர்ந்தவர்களும், கிட்டத்தட்ட 10 மணிநேரம் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்தனர். இப்பணி மேலும் நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை 17 பேர் உயிருடன் மீட்டெடுத்து அவசர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் நீரில் சிக்கியிருப்பதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.