இந்தியா

முன்னாள் ராணுவ வீரரின் மகன் தற்கொலை 

ஏஎன்ஐ

எல்லையில் வீரர்களுக்கு மோசமான உணவு பரிமாறப்படுவதாக சமூக வலைதளத்தில் புகார் எழுப்பியதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ். இவரது மகன் ரோஹித் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய வீரர் தேஜ் பகதூர் யாதவ். இவர் எல்லையில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து புகார் எழுப்பினார்.

தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்குச் செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் தேஜ் பகதூர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தேஜ் பகதூர் யாதவின் மகன் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இவர்களது வீடு ஹரியாணா மாநிலத்தின் ரேவாரி மாவட்டத்தில் உள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "ரோஹித் வீட்டிலிருந்து எங்களுக்கு ஃபோன் வந்தது. ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. நாங்கள் சென்றபோது அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. சடலம் கட்டிலின் மேல் கிடந்தது. அருகில் ஒரு கைத்துப்பாக்கியும் இருந்தது.

தேஜ்பகதூர் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக உத்தரப் பிரதேசம் சென்றிருந்தார். அவருக்கு நாங்கள் தகவல் கொடுத்திருக்கிறோம். ரோஹித் மரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை.

SCROLL FOR NEXT