இந்தியா

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் புதிய திருப்பம்: ராகுல், சோனியாவின் வருவானவரி கணக்குகள் மறுமதிப்பீடு; உச்ச நீதிமன்றம் அனுமதி

பிடிஐ

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டுவருமான வரிக் கணக்குகளை மறுமதீப்பீடு செய்ய வருமான வரித்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதேசமயம் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ராகுல், சோனியா ஆகியோருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவும் வருமானவரித்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ‘அசோசியேடட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகளை ‘யங் இந்தியா’ என்ற நிறுவனத்தின் மூலம் பெற்றதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சம் கொடுத்து முறை கேடாகக் கையகப்படுத்தியதாகவும் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்

 ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் சோனியாவும் ராகுலும் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை சோனியா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனை வரும் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் சோனியா, ராகுல் உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரிக் கணக்குகளை ஆய்வு செய்ய அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஸ்கார் பெர்னான்டஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஆஸ்கார் பெர்ணான்டஸ் மனுவைத்தள்ளிபடி செய்து மீண்டும் 2011-12-ம் ஆண்டு வருமான வரிக் கணக்குகளை ஆய்வுசெய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து ராகுல் காந்தி, சோனியா காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.கே. சிக்கிரி தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

சோனியா, ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், அரவிந்த் தத்தார் ஆகியோர் ஆஜராகினார்கள். வருமான வரித் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், சோனியா, ராகுலின் கடந்த 2011-12-ம் ஆண்டு வருமான வரிக் கணக்குகளை வருமானவரித்துறை மறு ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும். உத்தரவுகள் பிறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், இதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிக்ரி பிறப்பித்த உத்தரவில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரிக் கணக்குகளை மீண்டும் வருமானவரித்துறை ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், எந்தவிதமான உத்தரவும் இப்போது பிறப்பிக்க இயலாது. வருமானவரித்துறையும் எந்தவிதமான உத்தரவும் பிறக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 2019, ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT