இந்தியா

லாபத்தை உள்ளூர் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: பாபா ராம்தேவ் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

யோகா குரு பாபா ராம்தேவின் நிறுவனமான திவ்யா ஃபார்மஸி நிறுவனம் தனது லாபத்தின் குறிப்பிட்ட பகுதியை உள்ளூர் விவசாயிகள், மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாபத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரகாண்ட் பல்லுயிர் வாரியம்(யுபிபி) சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திவ்யா ஃபார்மஸி நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

யோகா குரு பாபா ராம் தேவ் ஆதரவு பெற்ற திவ்யா ஃபார்மஸி நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. முழுவதும் மாநிலத்தில் விளையும் ஆயுர்வேத, மூலிகை பொருட்களைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் பல்லுயிரி  சட்டம் 2002-ன் கீழ், திவ்யா ஃபார்மஸி நிறுவனம், உள்ளூரில் விளையும் மூலப் பொருட்கள், மூலிகை மற்றும் ஆயுர்வேத பொருட்களை கொண்டு மருந்துகளைத் தயாரிப்பதால், தனது லாபத்தின் குறிப்பிட்ட பகுதியை அப்பகுதி விவசாயிகளுக்கும், குறிப்பிட்ட சமூக மக்களுக்கும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, திவ்யா ஃபார்மஸி சார்பில், டேராடூன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் பல்லுயிர் வாரியம் தங்களுக்கு இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க எந்தவிதமான அதிகாரமும் இல்லை, அபராதமோ அல்லது நாங்கள் எந்தவிதமான லாபத்தையும் உள்ளூர் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு தீர்ப்பை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “ பல்லுயிர் வாரியம் தனது எல்லைக்கு உட்பட்டுத்தான் தீர்ப்பளித்துள்ளது. மாநிலத்தில் விளையும் மூலப்பொருட்கள், மூலிகை பொருட்கள் நாட்டின் சொத்து மட்டுமல்ல, அந்த மக்களுக்கும் உரிமையானது. ஆதலால், திவ்யா ஃபார்மஸி நிறுவனம் தனது லாபத்தின் குறிப்பிட்ட பகுதியை உள்ளூர் விவசாயிகள், சமூக மக்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் .

இதையடுத்து திவ்யா ஃபார்மஸி நிறுவனம் தன்னுடைய லாபத்தில் ரூ.421 கோடியில், ரூ.2 கோடியை உள்ளூர் விவசாயிகள், மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பின் நகல் அனைவருக்கும் நேற்றுமுன்தினம் மட்டுமே கிடைத்தது

SCROLL FOR NEXT