முகலாயர்களை போல கம்யூனிஸ்ட்டுகள் இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க முயலுகிறார்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அகர்தலாவில் நடந்த இதிகாச சஞ்சலன் யோஜனா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘இந்தியாவின் பழங்கால கலாசாரம், நாகரீகம் ஆகியவற்றை ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் திரிபுரா மக்கள். அவர்கள் எப்போதுமே பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மதிப்பவர்கள். ஆனால் திரிபுராவில் சில விஷமிகளால் கம்யூனிஸம் வளர்க்கப்பட்டது.
இந்திய கலாசாரத்தையும், நாகரீகத்தையும் அழிக்க அவர்கள் முயற்சி செய்ததுடன், எதிர்ப்பாளர்களின் குரலை நெறித்தனர். மக்களனை தவறாகவும் வழிநடத்த முயற்சி செய்தனர். ஆனால் திரிபுரா மக்கள் அவர்களை புரிந்து கொண்டு நிராகரித்து விட்டனர்.
பாஜக நாட்டை காவிமயமாக்க முயற்சி செய்வதாக இடதுசாரி கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. இது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் உண்மையில், கம்யூனிஸ்ட்டுகள் தான் உலகத்தை சிவப்பு மயமாக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.
உலகத்தை ஆள ஆசை கொண்டு இந்தியாவுக்கு வந்த மன்னர் அலெக்சாண்டர், இந்திய மன்னர் போரஸிடம் தோற்று மண்டியிட்டார். முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்திய கலாசாரத்தை அழிக்க முயன்று தோல்வியடைந்தனர். கம்யூனிஸ்ட்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’’ என அவர் பேசினார்.