மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள புறநகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் அந்த இளைஞரைக் கூட்டத்தினர் பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக இருப்பவர் ராமதாஸ் அதவாலே. இவர் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இந்திய குடியரசுக் கட்சி அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில், மும்பையின் புறநகரான தானேயில் உள்ள அம்பர்நாத் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அமைச்சர் ராமதாஸ் அதவாலே வெளியேறிய போது, இந்திய குடியரசுக் கட்சியின் கொடியைப் பிடித்துக்கொண்டு அவர் முன் வந்தார்.
தன்னுடன் செல்ஃபி எடுக்கக் கோரிய இந்த இளைஞர், திடீரென அமைச்சரைக் கீழே தள்ளி, அவரின் கன்னத்தில் அறைந்தார், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் திகைத்தனர். அந்த இடத்தில் இருந்து ஓட முயன்ற அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அமைச்சரின் பாதுகாவலர்களும் தங்கள் பங்கிற்கு அடித்து, அந்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்தனர். இந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் பிரவின் கோசாவி என்பது தெரிந்தது. பிரவின் கோசாவி, இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞரிடம் அமைச்சரை அடித்தற்கான காரணத்தைக் கேட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, அமைச்சர் ராமதாஸ் அதவாலே அங்கிருந்து உடனடியாக மும்பை புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும், மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.