99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘பல ஆண்டுகளாகவே நாட்டிற்கு ஜிஎஸ்டி முறை தேவையாக இருந்தது. அதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்த இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது.
புதிய பாதையில் இந்திய பொருளாதாரத்தை கட்டமைக்கும் பணி தொடரும். வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமூகமான முறையாக ஜிஎஸ்டி முறையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு முன்னர் 65 லட்சம் நிறுவனங்கள் மட்மே பதிவு செய்திருந்தன. ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கையில் கூடுதலாக 55 லட்சம் அதிகரித்துள்ளது. சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் உள்ளிட்ட, 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.