கர்நாடகமும் தமிழகமும், இந்தியா - பாகிஸ்தான் போன்று விரோதிகள் இல்லை, சகோதர்கள் என்பதால், மேகேதாட்டு விஷயத்தில் சுமுகமாகப் பேசி முடிவு எடுப்போம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இது தொடர்பான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு உள்ளிட்டோரைச் சந்தித்தார். அதன்பின் மாலையில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
அப்போது மேகேதாட்டு அணை வரைவு செயல்திட்டத்துக்கு அனுமதி வழங்கியதற்குப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், மேகேதாட்டு அணை விவகாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இரு கட்சி எம்.பி.க்களும் கடந்த ஒருவாரமாக கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் நேற்றும் இந்தப் பிரச்சினையை எழுப்பியதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மேகேதாட்டு அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சினையைத் தீர்க்க, இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டு விரைவில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
ஆதலால், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் இந்தக் கூட்டம் இருக்கும் என்று நம்புகிறேன். நீதிமன்றத்தில் சென்று இந்தப் பிரச்சினையில் தீர்வு காண்பதைக் காட்டிலும் சுமுகமாகப் பேசித் தீர்வு காணலாம் என்று தமிழகத்துக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
நீதிமன்றத்துக்குச் சென்றால், தொடர்ந்து வழக்கு நடக்கும். சட்டரீதியாகத் தீர்வு காணமுடியாது. சுமுகமாகப் பேசித்தீர்க்க வேண்டிய விஷயம். தமிழகமும், கர்நாடகமும் இந்தியா பாகிஸ்தான் போன்று விரோதிகள் இல்லை. நாங்கள் சகோதரர்கள். மேகேதாட்டு அணை குறித்து ஆலோசித்து, தீர்வு காண்போம்.
இந்த விஷயத்தை அரசியல் ஆக்கவேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். இந்த விஷயத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். இது பெரிய பிரச்சினை அல்ல. கடலில் வீணாகச் சென்று கலக்கும் காவிரி நீரை தடுத்துதான் நாங்கள் அணைக் கட்டப்போகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பருவமழை காலத்தில் தமிழகத்துக்குக் காவிரியில் இருந்து 390 டிஎம்சி நீர் வழங்கி இருக்கிறோம். அந்த தண்ணீரை தமிழகத்தால் மேட்டூர் அணையில் தேக்கிவைக்க முடியாமல், கடலில்தானே கலந்தது''.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.