ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொகத்தாவில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பெடேதார் என்ற இளைஞர் தனது மொபைல் மற்றொரு நபருடன் பேசியுள்ளார். அப்போது, விமானத்தை கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளதாக போனில் தகவல் கூறியுள்ளார். அவருக்கு அருகில் இருந்த பயணி இதை கேட்டுள்ளார். உடனடியாக விமான ஊழியர்களுக்கு தகவல் தந்தள்ளார்.
இதையடுத்து ஊழியர்கள் கொல்கத்தா விமான நிலையத்துக்கு தகவல் தந்தனர். கொல்கத்தா விமான நிலையத்தில் தொழிலக பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டது. விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அந்த இளைஞரை தொழிலக பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர் கொல்கத்தா போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் யார்? எதற்காக இதுபோன்று மிரட்டல் விடுத்தார் என கொல்கத்தா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இரண்டு மணிநேரம் தாமதமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.