பிரபல சிதார் இசைக்கலைஞர் உஸ்தாத் இம்ரத் கான் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 83.
சிதார் வாத்தியத்தின் இசையின் பெருமையை உலகம் முழுவதும் அறியச் செய்ததில் முக்கிய பங்காற்றியவர் சிதார் இசைக் கலைஞர் உஸ்தாத் இம்ரத் கான். கொல்கத்தாவில் இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் இம்ரத் கானுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இம்ரத் கான் இறந்தார்.
இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவரது மகன் நிஷாத் கான் தெரிவித்தார். நிஷாத்கானும் சிதார் இசைக் கலைஞர். தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
கடந்த ஆண்டு உஸ்தாத் இம்ரத் கானுக்கு அவரது இசை சேவையை பாராட்டி மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், இது காலம் கடந்த அங்கீகாரம் என்று கூறி விருதைப் பெற இம்ரத் கான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.