காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டம் பிஜ்பேஹராவில் உள்ள வகஹாமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மறைவிடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 6 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இத்தகவலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டது இந்த ஆண்டில் பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய வெற்றிகரமான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.