தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஜனா சவுத்ரியின் ஹைதராபாத் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று 2 நாளாக சோதனை நடத்தினர்.
சுஜனா சவுத்ரிக்கு சொந்தமான சுஜனா குழுமம், கார்ப்பரேஷன் வங்கியிலிருந்து ரூ.120 கோடி, சென்ட்ரல் வங்கியிலிருந்து ரூ. 124 கோடி, ஆந்திரா வங்கியிலிருந்து ரூ. 60 கோடி என மொத்தம் ரூ. 304 கோடி கடன் வாங்கியது. சுஜனா குழும இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸ் கல்யாண் ராவ் என்பவரின் பெயரில் இக்கடனை பெற்றுள்ளது. இவர் மீது வங்கிகள் கொடுத்த மோசடிப் புகாரின் பேரில் கடந்த 2016-ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
தற்போது, மொரீஷியஸ் கமர்ஷியல் வங்கி கொடுத்த மோசடிப் புகாரின் பேரில் சுஜனா சவுத்ரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னையைச் சேர்ந்த அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை தொடங்கினர். இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது.
இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் 6 உயர்ரக கார்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. மேலும் இது தொடர்பாக வரும் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சுஜனா சவுத்ரிக்கு சம்மன் பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.