இந்தியா

மகாராஷ்டிர ராணுவ குடோனில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் பலி

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகே வெடிபொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் வெடிபொருட்கள் வெடித்து 6 பேர் பலியாகினர்.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு வார்தா அருகே அமைந்துள்ளது. இந்த கிடங்கையொட்டியுள்ள பகுதியில் மைதானமும் உள்ளது. இங்கு தேவையற்ற வெடிபொருட்கள் அழிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், இந்த சேமிப்பு கிடங்கில் இன்று காலை வெடிமருந்து பொருட்களை இறக்கி வைக்கும் பணி நடந்து வந்தது. ஒப்பந்த தொழிலாளர்கள் 15 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

வெடிமருந்துகள் அடங்கிய பெட்டிகளை தொழிலாளர்கள் இறக்கி வைத்தபோது, ஒரு பெட்டி  திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பெட்டிகளை இறக்கி வைக்கும் பணியை செய்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக அங்கிருந்துவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெடிமருந்து வெடிப்பில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் பலத்த காயமடைந்த 6 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT