இந்தியா

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடலாம்: சட்ட நிபுணர் தகவல்

ஆர்.ஷபிமுன்னா

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் தாங்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்கப்படலாம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்கள் அச்சம்தெரிவித்திருந்தனர்.  18 எம்எல்ஏக்களில் முக்கியமானவரான தங்கதமிழ் செல்வன், தமக்கு ஆட்சியாளர்களால் தடை ஏற்படும் என்ற அச்சம் எழுந்திருப்பதாகவும், இதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தேர்தலில் போட்டியிடத் தடை இல்லை என உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பெறப்போவதாகவும்  தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான விஸ்வநாதன் கூறும்போது, ‘‘அரசியல் சாசனத்தின்படி கட்சித் தாவல் காரணமாக எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை. கட்சித் தாவல்சட்டத்தின்படிதான் 18 எம்எல்ஏக்களும் பதவி இழந்துள்ளனர். எனவே, அவர்கள் போட்டியிட சட்டப்படி எந்தத் தடையும் இல்லை, எந்த ஆட்சியாளர்களும் எம்எல்ஏக்கள் கட்சித் தாவலுக்காக அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது" என்றார்.

SCROLL FOR NEXT