சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் குறித்து முடிவு செய்யப்பட்ட பிறகே புதிய 3 மனுக்கள் மீது முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயி லுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை.
இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் 49-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 23-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.
அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அமர்வு முன்பு மறுஆய்வு மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றன.
இதனிடையே சபரிமலை தீர்ப்பு அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக கூறி 3 ரிட் பெட்டிஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம் ஆஜரானார். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில் ‘‘ரிட் பெட்டிஷன்களை மீதான விசாரணையை இப்போது முடிவ செய்ய முடியாது.
49 மறு சீராய்வு மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை பொறுத்து தான் முடிவு செய்யப்படும். மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் இவை தனியாக விசாரிக்கப்படும். அதேசமயம் மறு சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டால் அதனுடன் சேர்ந்து ரிட் பெட்டிஷன்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என தெரிவித்தார்.
49 மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் பிற்பகல் 3:00 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளன.