பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்படுகிறது. இந்த விலை மாற்றம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலாகிறது.
அதேவேளையில், டீசல் விலையில் வழக்கம்போல் 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பான தனது கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. அப்போதிருந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் சாதக நிலை நிலவுவதால், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை மாற்றம், உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
இந்த மாதத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்படுவது இது மூன்றாவது முறை என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக, கடந்த 14-ம் தேதி விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், மானியத்தால் ஏற்படும் இழப்பு காரணமாக, வழக்கம்போல் இம்முறையும் டீசல் விலையில் 50 பைசா உயர்த்தப்பட்டது.
சென்னையில் நிலவரம்:
சென்னையில் உள்ளூர் வரி மற்றும் வாட் வரிக்கு ஏற்ப, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 1.92 பைசா குறைக்கப்படுகிறது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.47-ல் இருந்து ரூ.71.55 ஆகிறது.
அதேவேளையில், சென்னையில் டீசல் விலை 62 பைசா உயர்த்தப்படுகிறது. லிட்டர் விலை ரூ.62.30-ல் இருந்து ரூ.62.92 ஆகிறது.