உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க குஜராத் அரசு சார்பில் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் பழங்குடி முன்னேற்றம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கண்பத் வாசவா தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலகம் வந்து இதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
சர்தார் படேல் சிலை, நர்மதை நதிக்கரையில் ரூ.2,389 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பிரதமர் மோடி, படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.