திஹார் சிறையில் இருந்தபோது பகவத் கீதை மற்றும் உபநிடதங்கள் படித்து மனவலிமையும், ஆறுதலும் பெற்றேன் என சிறையில் இருந்து வெளியான, முஸ்லிமான முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரும் சுகைப் இல்யாசி கூறியுள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் சுகைப் இல்யாசி. இவர் ‘‘இண்டியாஸ் மோஸ்ட் வான்டெட்’’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.
இந்தநிலையில், மனைவி அஞ்சு மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் சுகைப் இல்யாசி அவரை கொடுமை படுத்தி கொலை செய்தாக புகார் எழுந்தது.
விசாரணைக்குப்பின் அவரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுகைப் இல்யாசிக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த டெல்லி உயர் நீதமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான இல்யாசி கூறுகையில் ‘‘நீதித்துறையின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை, என்னை காப்பாற்றிவிட்டது. நான் தினமும், ஐந்து வேளை தொழுகை நடத்தும் முஸ்லிம். எனினும், சிறையில் இருந்த போது, தொழுகை நடத்த மறக்கவில்லை. எனினும் ஹிந்து மதத்தின் பகவத் கீதை, உபநிடதங்களையும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் படித்தேன்.
இது, எனக்கு மனவலிமையையும், நிம்மதியையும் அளித்தது. சிறையில் பாதுகாப்பின்மையுடனும், தனிமையுடனும் இருப்பதாக உணர்ந்தேன். எனது எதிர்மறையான எண்ணங்கள் மறைய இது உதவியது. தற்போது நான் சிறையில் இருந்து மட்டும் விடுதலை பெறவில்லை. ஆன்மீக ரீதியிலும் உணர்வு பூர்வமாக விடுதலையாகியுள்ளேன்’’ எனக் கூறினார்’’ எனக் கூறினார்.