பாட்னா: தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 இடங்களில் வென்ற ஆர்ஜேடிக்கு இந்த தேர்தலில் 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஆர்ஜேடி வெளியிட்ட பதிவில், “பொது சேவை என்பது ஒரு இடைவிடாத செயல்முறை, முடிவில்லாத பயணம். அதில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை. தோல்வியில் வருத்தம் இல்லை, வெற்றியில் ஆணவம் இல்லை. ஆர்ஜேடி ஏழைகளின் கட்சி. அவர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பும்’’ என கூறப்பட்டுள்ளது.