புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கிய அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் பிஎம்எல்ஏ மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் பலேஷ் குமார், ராஜேஷ் மல்ஹோத்ரா அமர்வு விசாரித்தது. அப்போது, சொத்துகளை முடக்கி 365 நாட்களுக்கு மேல் தாமதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு அமலாக்கத் துறை, கரோனா தொற்று காலத்தில் உச்ச நீதிமன்றம் விதிவிலக்கு அளித்ததை சுட்டிக்காட்டி வாதிட்டது. அமலாக்கத் துறையின் வாதத்தை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.