புதுடெல்லி: நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாப்படுகிறது.
படேலின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் கெவாடியா நகரில் அமைந்துள்ள படேலின் பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி நேற்று காலை மலரஞ்சலி செலுத்தி வழிபட்டார். அதன்பின் அவர் ஒற்றுமை உறுதிமொழி எடுத்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் கலைக் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
சுதந்திரத்துக்கு பிறகு, நாட்டில் உள்ள 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை சர்தார் படேல் ஒன்றிணைத்தார். இது யாராலும் செய்ய முடியாத பணி. அவருக்கு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு முக்கியமானது. முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தவறான நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் காஷ்மீரை ஒன்றிணைக்க முடியவில்லை. இறையாண்மை என்பது அனைத்தையும் விட மேலானது.
வரலாற்றை எழுதி நேரத்தை வீணடிக்க கூடாது, வரலாற்றை உருவாக்க வேண்டும் என்பதில் சர்தார் படேல் உறுதியுடன் இருந்தார். இந்தியாவை ஒன்றிணைத்து அவர் வரலாறு படைத்தார். நாட்டின் ஒற்றுமைக்கு பின்னால் அவர் உந்து சக்தியாக இருந்தார். அதனால்தான் நாட்டின் தலைவிதி மாறியது. நாட்டின் ஒற்றுமை, சிறந்த நிர்வாகம், பொது சேவை ஆகியவற்றில் அவர் உறுதியுடன் இருந்தது பல தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
ஒருங்கிணைந்த, வலிமையான மற்றும் தற்சார்பு இந்தியா என்ற அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதில் நாமும் உறுதியுடன் இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.