இந்தியா

நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தகைய செயலிகளை மறைமுகமாக ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவண் மற்றும் சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் இந்தி நடிகர் சோனு சூட் உள்ளிட்டோரிடமும் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நடிகை ஊர்வசி ரவுதேலாவுக்கும் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி, அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

SCROLL FOR NEXT