கேரளாவில் மீன் விற்பனை செய்துவரும் மாணவி ஹனன் ஹமித் வெள்ள நிவாரணமாக ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மீன் விற்பனை செய்துகொண்டே படித்து வரும் மாணவி ஹனனை சமூக ஊடகங்களில் சிலர் சமீபத்தில் விமர்சித்து கடும் சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனும், பல்வேறு விஐபிக்களும் ஆதரவு தெரிவித்து, நிதியுதவி அளித்தனர்.
அப்போது பெற்ற நிதியில் இருந்து ஒரு பகுதியை கேரளப் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க ஹனன் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ஹனன் நிருபர்களிடம் கூறுகையில், ''எங்கள் மாநிலத்தில் நிலவும் வெள்ளச் சூழலைப் பார்த்து, என்னிடம் இருக்கும் பணத்தில் ரூ.1.50 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறேன்.
என்னுடைய நிலையைப் பார்த்து கடந்த மாதம் ஏராளமானோர் என்னுடைய வங்கிக்கணக்கில் பணம் அனுப்பி எனக்கு உதவி செய்தனர். அப்போது, அவர்களுக்கு திருப்பி நன்றிசெய்ய ஒருவாய்ப்பு. எனக்கு என்ன கிடைத்ததோ அதை திருப்பி அளிக்கிறேன்.
கோதமங்கலத்தில் உள்ள நிவார முகாம்களில் மக்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவ இந்தப் பணத்தை அளிக்கிறேன்'' என ஹனன் தெரிவித்துள்ளார்.