இந்தியா

மதம் கடந்து ‘கை’ தானம் வழங்கிய இந்து சிறுமியின் சகோதரனுக்கு ‘ராக்கி கயிறு’ கட்டிய முஸ்லிம் பெண்!

செய்திப்பிரிவு

வல்சாத்: மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரிகாவன் பகுதியை சேர்ந்தவர் அனம்தா அகமது (15). இவர் உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அங்கு 11 ஆயிரம் கிலோ வாட் உயரழுத்த கேபிளில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அனம்தாவின் வலது கை மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டது. இடது கை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் கைகள் பாதிக்கப்பட்டதால் அனம்தா பெரும் மன அழுத்தத்தில் இருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன. அப்போது மும்பை கோரிகாவ்ன் பகுதியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் ரியா என்ற சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டாள். பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. கடைசியில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சூரத்தில் உள்ள கிரண் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ரியா உயிரிழந்தாள்.

அதனால் ரியா குடும்​பத்​தினர் பெரும் அதிர்ச்சி அடைந்​தனர். எனினும் உடல் உறுப்பு தானம் அளிக்க ரியா​வின் தாய் திரிஷ்​னா, அவரது கணவர் பாபி​ ஒப்​புக் கொண்​ட​னர். அதன்பின், ரியா​வின் 2 சிறுநீரகங்​கள், கல்​லீரல், நுரை​யீரல், கைகள், குடல் மற்​றும் கரு​விழிகள் எடுக்​கப்​பட்​டன. பின்​னர் ரியா​வின் வலது கை உடனடி​யாக மும்​பைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. அந்த கை குளோபல் மருத்​து​வ​மனை​யில் அனம்​தாவுக்கு பொருத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், சகோ​தரத்​து​வத்தை வெளிப்​படுத்​தும் ரக்‌ஷா பந்​தன் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு மும்​பை​யில் இருந்து அனம்தா குடும்​பத்​தினர் நேற்று குஜ​ராத்​தின் வல்​சாத்​துக்கு வந்​து ரியா குடும்​பத்​தினரை சந்​தித்​தனர். அந்​தச் சந்​திப்பு மிக​வும் உணர்ச்​சிப்​பூர்​வ​மாக இருந்​தது.

அனம்தா வந்​ததும் அவரை கட்​டியணைத்து ரியா​வின் குடும்​பத்​தினர் வரவேற்​றனர். அப்​போது ரியா​வின் சகோ​தரர் ஷிவம் கையில் ராக்கி கயிறு கட்டி அனம்தா கண்​ணீர் விட்​டார். ஷிவம் கூறுகை​யில், ‘‘என் அன்பு சகோ​தரி ரியா ராக்கி கயிறு கட்​டியது போலவே உணர்ந்​தேன்’’ என்​றார். அனம்தா கூறுகை​யில், ‘‘இன்று முதல் என் பெயர் அனம்தா என்​கிற ரியா. ஆண்​டு​தோறும் அவருக்கு ராக்கி கயிறு கட்​டு​வேன்.’’ என்று உணர்ச்​சிப் பெருக்​கில் கூறி​னார்.

ரியா​வின் தாய் திரிஷ்னா கூறுகை​யில், ‘‘ஷிவம் கையில் அனம்தா ராக்கி கயிறு கட்​டிய போது, ரியாவே நேரில் வந்​தது போல் தோன்​றியது’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT