இந்தியா

தெலங்கானாவில் தண்டவாளம் மீது கார் ஓட்டிய இளம்பெண்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

வெற்றி மயிலோன்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தண்டவாளம் மீது இளம்பெண் ஒருவர் காரை ஓட்டிச் சென்றதால் 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நாகுலப்பள்ளி மற்றும் சங்கர்பள்ளி இடையே இளம்பெண் ஒருவர், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டிச்சென்றதால் ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

நாகுலப்பள்ளி அருகே இன்று தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் காரை ஓட்டிச் செல்வதை பார்த்த மக்கள், அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் அந்தப் பெண் அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கும், காவல்துறைக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் உடனடியாக அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்த பெண்ணை கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் என்பதும், ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வேலையிழந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா அல்லது மனநலப் பிரச்சினைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய செவெல்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT