இந்தியா

வாக்​குப்​ப​திவு வீடியோக்​கள் பெற தடை: ஜெய்​ராம் ரமேஷ் மனுவுக்கு தேர்தல் ஆணை​யம் பதில் அளிக்க நீதிமன்றம் கெடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாக்குப்பதிவு வீடியோக்களை பெற தடை விதித்து தேர்தல் விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்ததற்கு எதிராக ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் 1961-ன்படி, தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வுக்காக பொதுமக்கள் பெறலாம் என இருந்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைபடி, இந்த விதிமுறையில் மத்திய சட்ட அமைச்சகம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருத்தம் செய்தது. இதன்படி வாக்குப்பதிவு மையங்களின் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை பெற தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலார் ஜெய் ராம் ரமேஷ் மனுத்தாக்கல் செய்தார். மேலும் இருவரும் இது தொடர்பாக பொது நல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், ‘‘சிசிடிவி கேமிரா பதிவுகள் வாக்காளரின் அடையாளத்தை தெரிவிக்கும் என்பதால், புத்திசாலித்தனமாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து, அதை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. வேகமாக அழிந்து கொண்டிருக்கும் தேர்தல் நடைமுறையின் நேர்மையை மீட்க உச்ச நீதிமன்றம் உதவ வேண்டும்’’ என மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் கூறியிருந்தனர்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணைத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கி அமர்வு கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், பதில் அளிக்க மேலும் 3 வாரங்கள் அவகாசம் வேண்டும் என கூறினார். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஜூலை 21-ம் தேதி பதில் அளிக்க கெடு விதித்தது.

SCROLL FOR NEXT