கூட்டுறவுத்துறைகள் உலகளாவிய கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், ஆர்கானிக் பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கூட்டுறவுத்துறை முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:
தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். உலகளாவிய கூட்டுறவு நிறுவனங்களுடன் கூட்டுறவுத்துறை இணைந்து செயல்பட வேண்டும். ஏற்றுமதி சந்தையில் சிறப்பு கவனம் செலுத்தி ஆர்கானிக் பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும். வேளாண் தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்த, ‘அக்ரிஸ்டாக்’ என்ற டிஜிட்டல் பொது கட்டமைப்பை பயன்படுத்த வேண்டும். பண பரிமாற்றங்களை எளிதாக்க விவசாயிகளின் கடன் அட்டையில் ரூபே யுபிஐ-யை இணைக்க வேண்டும்.
வேளாண் நடைமுறைகளை மேம்படுத்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் மண் பரிசோதனை செய்ய வேண்டும். கூட்டுறவு அமைப்புகள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்துவது அவசியம். பள்ளி, கல்லூரிகள், ஐஐஎம்களில் கூட்டுறவு பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். வெற்றிகரமான கூட்டுறவு நிறுவனங்களை ஊக்குவித்து, எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும். செயல்பாடு அடிப்படையில் கூட்டுறவு நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி போட்டியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.