இந்தியா

பொது தேர்வு குறித்து கலந்துரையாடல்: மாணவர்களுக்கு சத்குரு அறிவுரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்வுகளை தங்களுடைய அறிவுத்திறனுக்கு சவாலாக கருத வேண்டாம் என்று மாணவர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் பள்ளி இறுதித் தேர்வின்போது மாணவர்களுடன் தேர்வு குறித்த விவாதம் (பரீக்சா பே சர்ச்சா) என்ற தலைப்பில் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பிரதமரைப் போலவே, ஈஷா பவுண்டேஷன் தலைவர் ஜக்கி வாசுதேவும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது ஸ்மார்ட்போன்கள் நமது அன்றாட வாழ்வியலை எளிதாக்குகின்றன. ஸ்மார்ட்போன்களை விட நாம் இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும். மேலும், தேர்வுகளை மாணவர்கள் தங்களுடைய அறிவுத்திறனுக்கு சவாலாக கருத கூடாது. தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்.

ஸ்மார்ட்போன்களை எவ்வாறு உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் அறிந்து வைத்திருக்கவேண்டும். அதை எந்த நேரமும் பயன்படுத்தக்கூடாது. ஸ்மார்ட்போன்களில் மூழ்கி நேரத்தை வீணாக்கக்கூடாது. உங்கள் அறிவுத்திறனை தூண்டிக் கொண்டே இருங்கள். மூளையை அதிகம் பயன்படுத்தவேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செயல்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பார்க்கும் அனைத்தையும் எளிதில் அணுக முடியும். வாழ்க்கையில் வெற்றி பெறவும் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT