மத்தியபிரதேச முதல்வர் மோகன் யாதவின் நேர்முக செயலாளராக தமிழர் சிபி சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ஈரோட்டை சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. இவர், 2008-ல் ஐஏஎஸ் பெற்று ம.பி. கேடரில் பணியாற்றுகிறார். தற்போது மாநில அரசின் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு ஆணையராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பாக முதல்வர் மோகன் யாதவின் நேரடி செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நேர்முக செயலாளராக ஒரு தமிழர் அமர்த்தப்படுவது சமீப காலங்களில் இதுவே முதன்முறை ஆகும்.
சிபி இதற்கு முன், மாநில கிடங்கு மற்றும் தளவாட கழகத்தின் நிர்வாக இயக்குநர், உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் விவகார ஆணையர், ம.பி. மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். பிந்த், நரசிங்பூரின் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக இருந்தபோது, மத்திய அரசின் அயல்பணியில் 2017 முதல் 2019 வரை அவரது உதவியாளராக சிபி இருந்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரான சிபி, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் படித்துள்ளார்.