இந்தியா

பொதுத் தேர்வு குறித்த பிரதமர் மோடியுடன் உரையாடல்: 2.79 கோடி மாணவர்கள் பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி மாணவர்களுடன் 8-வது முறையாக பங்கேற்கும் தேர்வு குறித்து ஆலோசிப்போம் நிகழ்ச்சிக்கு, இது வரை 2.79 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுடன், தேர்வு குறித்து ஆலோசிக்கும் (பரிக்ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி பங்கேற்று கலந்துரையாடி வருகிறார். இதில் தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார். இதன் முதல் நிகழ்ச்சி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு குறித்து ஆலோசிக்கும் நிகழ்ச்சி 8-வது முறையாக விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 14-ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்யலாம். இதுவரை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 2.79 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளைவிட இந்த முறை நடைபெறும் நிகழ்ச்சிக்கு மிக அதிகளவில் பதிவு நடைபெற்று வருவதாக கல்வித்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான பல்வேறு போட்டி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் தேசிய இளைஞர் தினமான வரும் 12-ம் தேதி முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்தாண்டு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடு முழுவதுதிலும் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT