இந்தியா

டிஜிட்டல் அரஸ்ட்டில் சிக்கியது எப்படி? - பிரபல யூடியூபர் அங்குஷ் கண்ணீர் தகவல்

செய்திப்பிரிவு

டிஜிட்டல் அரஸ்ட் என்ற மோடிக் கும்பலிடம் தான் சிக்கியது எப்படி என்பது குறித்து பிரபல யூடியூபர் விளக்கியுள்ளார்.

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர் அங்குஷ் பஹுகுணா. இவர், அண்மையில் ஒரு டிஜிட்டல் அரஸ்ட் கும்பலிடம் சிக்கி தனது பணத்தை இழந்துள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகாரும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

டிஜிட்டல் அரஸ்ட் கும்பலின் பல்வேறு மோசடிகள் குறித்து தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், நானே அந்த கும்பலிடம் சிக்குவேன் என்று நினைக்கவில்லை. சுமார் 40 மணி நேரம் டிஜிட்டல் அரஸ்ட் கும்பலிடம் பிணைக் கைதியாக இருந்தேன். நான் வைத்திருந்த தொகையை இழந்தேன்.

இதனால் கடந்த 3 நாட்களாக சமூக ஊடகங்களில் நான் ஆக்டிவாக இல்லை. நான் இன்னும் அந்த அதிர்ச்சியில்தான் இருக்கிறேன். இதனால் நான் பணத்தை இழந்தேன். நான் என் மன ஆரோக்கியத்தை இழந்தேன், இது எனக்கு நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

டிஜிட்டல் அரஸ்ட் கும்பலிடம் இருந்தபோது நான் அழுதேன். அவர்களிடம் என்னை மன்னிக்குமாறு அரற்றினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. என்னுடைய தங்கை, தாய் யாரிடமும் என்னை பேச அவர்கள் விடவில்லை.

சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட பார்சலில் என்னுடைய பெயர் இருப்பதாகவும், அதில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகக் கூறி மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன்.

சர்வதேச போன் அழைப்பில் என்னை தொடர்ந்து பேச வைத்துக் கொண்டிருந்தன். வேறு யாரிடமும் பேச என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. நான் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறாக இதை நினைக்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT