ஜார்ஜ் சோரஸ்... வயது 94. அமெரிக்காவில் செல்வாக்குள்ள தொழிலதிபர். கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வைத்துள்ளார். அதை வைத்து அறக்கட்டளை என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்கிறார். ஆனால், பல நாடுகளில் இவரது பணம் பல வேலைகளை செய்வதாக கூறுகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியதில் இருந்து தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவருகின்றன.
ஆனால், ராகுல் காந்திக்கும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாஜகவினர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினர். குறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் அதானியின் புகழைக் கெடுக்க, சர்வதேச அளவில் புலனாய்வு செய்திகளை வெளியிடும் ஓசிசிஆர்பி அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டினர். இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி வழங்குவதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. இப்படி மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற ஜார்ஜ் சோரஸ் உண்மையில் யார், அவரது நோக்கம் என்ன?
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார் ஜார்ஜ் சோரஸ். ஹங்கேரியை ஆக்கிரமித்த நாஜி படையினர் யூதர்களை கொன்று குவித்தனர். இதில் உயிர் தப்பிய சோரஸ் 1947-ல் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு தத்துவவியலில் முதுகலை பட்டம் பெற்றவர், முதலில் வங்கியில் பணியாற்றினார். பின்னர் அமெரிக்காவின் நியூயார்க்கில் குடியேறினார்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபத்தை குவித்தார். பின்னர் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையைத் தொடங்கி உலகம் முழுவதும் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார். இதுவரை ரூ.2.7 லட்சம் கோடியை பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கி உள்ளார். இங்குதான் அவரது உள்நோக்கம் இருப்பதாக சர்வதேச அளவில் கூறுகின்றனர்.
தனது கொள்கை, விருப்பம், தொழிலுக்கு ஆதரவாக செயல்படாத நாடுகளில் பத்திரிகை சுதந்திரம், சிறுபான்மையினர் உரிமை என்ற போர்வையில் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு இவரது அறக்கட்டளை நிதியுதவிவழங்கி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ், சோரஸுடன் இணைந்து பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இதுபோல, தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் பங்குச் சந்தை ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் பின்னணியிலும் ஜார்ஜ் சோரஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீரை ஒரு தனி நாடாக கருதுவதாக எப்டிஎல்-ஏபி அறக்கட்டளை கூறியிருந்தது. சோனியா இணை தலைவராக உள்ள இந்த அறக்கட்டளைக்குக்கும் சோரஸ் அறக்கட்டளை நிதியுதவி வழங்கும் ஓசிசிஆர்பி-க்கும் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவது, சோரஸ் அறக்கட்டளை துணைத் தலைவர் சலில் ஷெட்டி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றது என பல ஆதாரங்களை பாஜக.வினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் சோரஸ் அறக்கட்டளை நிதியுதவி வழங்கியதாக பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர். மொத்தத்தில் இந்தியாவில் உள்ள அரசு ஸ்திரத்தன்மையுடன் இருப்பது, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வருவது, சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவது போன்ற பல்வேறு அம்சங்களுக்கு எதிரான செயல்களை ஊக்குவிப்பதுதான் சோரஸின் நோக்கம் என்று பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.