தினேஷ் குண்டு ராவ் | கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடக மருத்துவமனைகளில் பணத்துக்காக சிசேரியன் பிரசவங்கள் - அமைச்சர் குண்டுராவ் தகவல்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணத்துக்காக அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் பிரசவ மரணங்கள் அதிகரித்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சட்டமேலவை உறுப்பினர் சட்டப்பேரவையில் பிரசவ மரணங்கள், அறுவை சிகிச்சை பிரசவங்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதில் அளித்து பேசியதாவது:“மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவங்களில் 46 சதவீத‌ம் அறுவை சிகிச்சைகள் மூலமே நடைபெறுகின்றன.

தனியார் மருத்துவமனையில் நடைபெறும் பிரசவ‌ங்களில் 61 சதவீதம் அறுவை சிகிச்சை பிரசவங்களே நடைபெறுகின்றன. ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் 90 சதவீதம் வரை அறுவை சிகிச்சை மூலமாகவே பிரசவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகளிடம் பணத்தை பிடுங்குவதற்காக இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கர்நாடக அரசு மருத்துவமனைகளிலும் 36 சதவீதம் அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள் நடக்கின்றன. இந்த அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் புதிய ச‌ட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.

இதற்கான பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரிவான ஆய்வை மேற்கொள்ள இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT