இந்தியா

‘நமது போராட்டம் நாட்டின் ஆன்மாவுக்கானது’ - வயநாடு எம்.பி., பிரியங்கா காந்தி பேச்சு

செய்திப்பிரிவு

வயநாடு: “இன்றைய போராட்டம் என்பது மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கும், அவர்களை சில தொழிலதிபர் நண்பர்களிடம் ஒப்படைப்பதற்கும் எதிரானது” என்று காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி பாஜகவை சாடியுள்ளார்.

வயநாடு தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்ட பின்பு இரண்டு நாள் பயணமாக வயநாடு வந்துள்ளார். அங்கு தன்னை எம்.பி.,யாக தேர்வு செய்தமைக்காக தொகுதி மக்களுக்கு திறந்த வானத்தில் சென்று அவர் நன்றி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மானந்தவாடியில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “இன்றைய நமது போராட்டம் என்பது நாட்டின் ஆன்மாவுக்கானது. நமது நாட்டின் கட்டமைப்பை அழிக்க நினைக்கும் ஒரு சக்திக்கு எதிராக நாங்கள் இன்று போராடி வருகிறோம். அதேபோல் வயநாடு தொகுதி மக்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் தோளோடு தோள் நின்று நான் போராடுவேன்” என்று பேசினார். அதேபோல், சுல்தான் பத்தேரியிலும், கல்பெட்டாவிலும் அவர் மக்களிடம் உரையாற்றினார்.

இரண்டு நாள் பயணமாக வயநாடு வந்துள்ள பிரியங்கா காந்தி, சனிக்கிழமை தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் திருவம்பாடியின் முக்கம், நிக்கம்பூரின் கவுளை, வயநாடு மக்களவதை தொகுதிக்கு உட்பட்ட கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வண்டூர் மற்றும் எடவன்னா ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்களிடம் பேசினார்.

முன்னதாக கடந்த மாதம் நடந்த வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் பெற்று, தனது சகோதரர் ராகுல் காந்தி இதே தொகுதியில் முன்பு போட்டியிட்ட போது பெற்ற சாதனை வெற்றிகளை முறியடித்து பெரும் வெற்றி ஈட்டினார்.

SCROLL FOR NEXT