ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி-ராமகுண்டம் தடத்தில் ராகவபூர் அருகே நேற்று முன்தினம் இரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தடம் புரண்டது.
வேகமாக சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கிடையே இருந்த லிங்க் அறுந்து போனதால் ஒன்றோடொன்று மோதி பெட்டிகள் தடம் புரண்டன. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் 3 ரயில்தண்டவாளங்கள் நாசமடைந்தன. இதனால் டெல்லி, சென்னைக்குசெல்லும் ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தால் உயிர் சேதங்கள் இல்லாவிட்டாலும் பொருட்சேதம் அதிகமாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே மண்டலம் ரத்து செய்துள்ளது. மேலும் 53 ரயில்கள் மாற்று பாதையில் செல்லவும், 7 ரயில்களின் நேரத்தை மாற்றி அனுப்பவும் ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சரக்கு ரயில் தடம் புரண்ட காரணத்தினால், நர்சாபூர்-செகந்திராபாத், ஹைதராபாத்-சிர்பூர் காகஜ்நகர், செகந்திராபாத்-காகஜ் நகர் உள்ளிட்ட 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே மண்டலம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.