புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்' (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்குச் செல்ல உள்ளார். தனது பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு `உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளுடன் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், இதுவரை பிரிக்ஸ் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட முயற்சிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் உலகளாவிய சமூகத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நீண்ட காலமாக நடந்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என தெரிகிறது. முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டுக்கான 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.