புதுடெல்லி: ‘இந்தியாவில் மரண தண்டனை: ஆண்டு புள்ளிவிவர அறிக்கை - 2025’ கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை ஹைதராபாத்தில் உள்ள தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் சட்டப் பல்கலைக்கழகத்தின், ‘தி ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக்’ குற்றவியல் நீதி பிரிவு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையில் விசாரணை நீதிமன்றங்கள் 1,310 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளன. அவற்றில் 106 பேருக்கு மட்டும் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் விசாரணை நீதிமன்றங்கள் அளிக்கும் தண்டனைகளுக்கும் உயர் நீதிமன்றங்களில் வெளிவரும் தீர்ப்புகளுக்கும் நிலையான இடைவெளி இருப்பதை காண முடிகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிறை கைதிகள் 574 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இது கடந்த 2016-ம் ஆண்டு முதல் அதிகபட்சமாகும். அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு மட்டும் 94 வழக்குகளில் 128 மரண தண்டனைகளை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவற்றில் பெரும்பாலான மரண தண்டனைகளை உயர் நீதிமன்றங்கள் குறைத்துள்ளன, அல்லது விடுவித்துள்ளன. இதே நிலைதான் உச்ச நீதிமன்றத்திலும் காணப்படுகிறது.
உயர் நீதிமன்றங்களில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரையில் உச்ச நீதிமன்றம் ஒருவருக்குக் கூட மரண தண்டனையை உறுதிப்படுத்தவில்லை.
விசாரணை நீதிமன்றங்களில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாற்றி தீர்ப்பளிக்கும் போது, மரண தண்டனை வழங்குவதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது. அதேநேரத்தில் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குற்றவியல் நீதிமுறையின் குறைகளை எடுத்துக் காட்டுகிறது. இது விசாரணையின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. இந்த தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களும், குற்றவாளிகளும் கூட பாதிக்கப்படுகின்றனர். அவர்களின், வாழ்வாதாரம் பாதிக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.